

பல்லடம் :
பல்லடம் வட்டாரத்திலுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற பல்லடம் அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். கிராமங்களில் போதிய மருத்துவ வசதி கிடைக்காததால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த வகையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.
அரசு மருத்துவமனையில் சுகாதார வளாகத்தை சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லை என்றும், நோயாளிகளே சுத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சுகாதார வளாகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. வெளியே இருந்து கொண்டு வந்துதான் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பணியாளர்கள் இல்லாததால், சுகாதார வளாகம் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனாலேயே நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்களை நியமித்து சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.