search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஆர்வமுடன் வாக்களித்த கிராமமக்கள்
    X

    இச்சிப்பட்டி அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரிசையாக நின்ற பொதுமக்கள். 

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஆர்வமுடன் வாக்களித்த கிராமமக்கள்

    • இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசியில் 16-வது வார்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் உப்பிலிபாளையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களிலும், பல்லடத்தில் 1-வது வார்டுக்கு இச்சிப்பட்டியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டன.

    பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2 ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

    கடந்த 4 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன்படி 4 மையங்களில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனோ தொற்று உள்ளவர்கள் 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது தெரிவித்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×