search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய தோட்டங்களில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல்
    X

    கோப்புபடம்.

    விவசாய தோட்டங்களில் தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல்

    • மர்ம நபர்கள் சிலர் முகத்தை மூடியபடி கதவை உடைக்க முயன்றனர்.
    • காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே குருக்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம் விவசாயி. இவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நல்லசிவம் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது இரவு 10 மணி அளவில் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று அவரது தோட்டத்திற்குள் புகுந்து வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே செல்ல ஆயுத்த மாகியுள்ளனர். சில நபர்கள் நடமாடும் சப்தம் கேட்டு நல்லசாமி ஏதேச்சையாக ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் முகத்தை மூடியபடி கதவை உடைக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நல்லசிவம் சுதாரித்து கொண்டு சப்தமிட்டு, செல்போன் மூலம் அருகில் இருந்த வீட்டினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு அங்கு வந்துள்ளனர். இதைப்பார்த்த அந்த கும்பல் தப்பியோடியுள்ளது. இதுகுறித்து நல்லசிவம் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதேபோல் காங்கேயம் அருகே உள்ள தம்மரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி ,அவரது மனைவி ஆகியோரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. 6 மாதங்கள் கடந்தும் இந்த இரட்டை கொலையிலும் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை.

    இந்நிலையில் அதே பாணியில் மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடனான கூட்டத்தை காவல் துறையினர் நடத்தியுள்ளனர். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் விவசாய தோட்டங்களில் தனியாக வசிக்கும் வயதானவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×