search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு -  உடுமலை பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்

    அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - உடுமலை பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்

    • புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
    • 90 அடி உயரமுள்ள அணையில் தற்போதைய நிலவரப்படி 71.10 அடி நீா் இருப்பு உள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

    இந்நிலையில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் கோரிக்கை வைக்கும்போதெல்லாம் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    குறிப்பாக திருப்பூா் மற்றும் கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது, இந்நிலையில் அதே பகுதிகளுக்கு தற்போது கால அளவு நீட்டிக்கப்பட்டு அணையில் இருந்து நேற்று தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களை சோ்ந்த அலங்கியம் முதல் கரூா் வரையில் உள்ள 10 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக ஆற்றின் மதகுகள் வழியாக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. நேற்று 8 ந் தேதி முதல் 28 ந் தேதி வரை 20 நாட்களுக்கு உரிய கால இடைவெளிவிட்டு 691 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும்.

    இதுபோக திருப்பூா் மாவட்டத்தில் 25, 250 ஏக்கா் சம்பா சாகுபடிக்காக பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.இதன் மூலம் 532 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் 47,117 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் என்றனா்.

    90 அடி உயரமுள்ள அணையில் தற்போதைய நிலவரப்படி 71.10 அடி நீா் இருப்பு உள்ளது. 4, 035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2, 476.26 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.

    அணைக்கு 117 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து உடுமலை பகுதியில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×