search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறி ஆடைகளை  பொதுமக்கள் வாங்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
    X

    கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியை துவக்கி வைத்த காட்சி.

    கைத்தறி ஆடைகளை பொதுமக்கள் வாங்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

    • தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்டது.
    • நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறிதுறை சார்பில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் அமைக்கப்ப ட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறிநெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோர காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம், துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்ப த்துடனும், தனித்துவத்துடனும் உற்பத்தி செய்யப்படு கின்றது.

    மேற்படி கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ரகங்களை பெருமளவில் கொள்முதல் செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திடவும் வேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறையின்சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 4 நெசவாளர்களுக்கும் , தலா ரூ.50,000 வீதம் 6 நெசவாளர்களுக்கு என மொத்தம் 10 நெசவாளர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான காசோலையையும், 15 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளர் கூட்டுறவு சங்க 45 நிரந்தர பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.

    முன்னதாக நெசவாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பொன்கோவில் நகரில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், நெசவாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×