அவிநாசி பேரூராட்சியில் குப்பையில் இருந்து இயற்கை - மண்புழு உரம் தயாரிப்பு

பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மண்புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற திட்டம் கடந்த மே மாதம் துவங்கப்பட்டது.அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், பொதுநல சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதாரப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி சார்பில் தினமும் 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. கைகாட்டிபுதூரில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் குப்பையில் இருந்து இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. மண் புழு உரம் கிலோ 10 ரூபாய், இயற்கை உரம், கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டன் கணக்கில் வாங்குவோருக்கு விலையில் சலுகையும் வழங்கப்படுகிறது.

பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை மற்றும் மண்புழு உரத்தில் கலந்துள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சான்று பெறப்பட்டுள்ளது. பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். கடந்த 5 நாட்களில் ஒரு டன் உரம் விற்பனையாகியுள்ளது. அரசின், தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடாக இப்பணி அமைந்துள்ளது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com