பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
Published on

பல்லடம்:

பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள்,மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றுள்ள மனோகரனுக்கு ஒன்றியக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஈஸ்வரி ( 2 வது வார்டு ): பல்லடம் முதல் பூமலூர் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கிடாத்துறை பகுதியில் சாலையின் வழியே செல்லும் பிஏபி வாய்க்கால் மீது பாலம் அமைக்க உள்ளனர். பாலம் 26 மீட்டர் நீளத்திற்கு உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறையினால் 10 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர். அப்படி அமைத்தால் வாய்க்கால்களில் வரும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே அந்த இடத்தில் 26 மீட்டர் முழுமையான அளவுக்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி : இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் : ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு மனை வரன்முறை படுத்த விண்ணப்பங்கள் அளித்தால் மிகவும் காலதாமதமாக வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அந்த விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவாக வழங்க வேண்டும்.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன்:விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மங்கையர்க்கரசி கனகராஜ் ( 10 வது வார்டு ):-

கோடங்கி பாளையம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு கேட் வால் ரோட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுகின்றன.வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் : குடிநீர் இணைப்பு கேட் வால் சிலாப் வைத்து மூட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது. பின்னர் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com