search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலைமலர் செய்தி எதிரொலி  பல்லடம் பஸ் நிலையத்தில்   புறக்காவல் நிலையம் திறப்பு
    X

    புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்ட காட்சி.

    மாலைமலர் செய்தி எதிரொலி பல்லடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா தாமதமாகி வந்தது.

    இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட புறக் காவல் நிலையத்தை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தில் பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்தின் ரூ.3.5 லட்சம் பங்களிப்புடன், ரூ.12 லட்சம் மதிப்பில் 40 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் பொத்தானை அமுக்கி துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நகரப் பகுதிகளில் தன்னார்வலர்கள் மற்றும் தொழில் துறையினர் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு உள்ளது. இதற்கிடையே கிராமப்புறங்களில் பொதுமக்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டும்போது, வீடுகளுக்கு முன்பு உள்ள தெருக்களை கண்காணிக்கும்படி ஒரு கேமராவை அமைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அதிக வழக்குகள் வருவதால், அருகேயுள்ள சில கிராமங்களை பிரித்து புதிய போலீஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உதவ வேண்டும். இதனால் குற்றச்செயல்களை போலீசாரால் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, நகராட்சி தலைவர் கவிதாமணி, நகராட்சி பொறியாளர் சுகுமார், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார், தமிழ் சங்க தலைவர் ராம் கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,குற்றப்பிரிவு சரஸ்வதி, மகளிர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராஜா, சுந்தரமூர்த்தி, மற்றும் போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×