சென்னையில் நடக்கும் கண்காட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த வாய்ப்பு - 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்படும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட பொருட்களை அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கண்காட்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2023-24-ம் ஆண்டு மண்டல அளவிலான சாராஸ் மேளா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடக்கிறது.

இந்த மேளாவில் கலந்து கொள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்படும் தரம் வாய்ந்த கைவினை பொருட்கள், எம்பிராய்டரி துணி வகைகள், ரெடிமேடு ஆடைகள், பரிசு பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பூவகைகள், தரமான ஊதுபத்தி, தேன், மூலிகை பொருட்கள், அலங்கார சங்கு பொருட்கள், கைப்பைகள், உணவு பொருட்கள், சணல் பொருட்கள் மற்றும் பல பொருட்களை இந்த கண்காட்சியில் கொண்டு வந்து அறிமுகப்படுத்த மற்றும் விற்பனை செய்ய வாய்ப்பு தரப்–படும்.

மண்டல அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விவரங்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் அறை எண்.305-ல் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளரை 97901 64775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com