search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்
    X

    குண்டடம் அருகே ஒரு விவசாய தோட்டத்தில் பயிர் செய்யப்பட்ட சின்ன வெங்காய பயிர்களை அறுவடை செய்த போது எடுத்த படம்.

    குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர்.
    • கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது.

    குண்டடம் :

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது;- குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

    கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்த போது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.

    சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு எந்த பயிர்களையும் உற்பத்தி செய்யமுடியாதநிலை ஏற்பட்டுவிடும். இதனால் அறுவடை செய்யும் பயிர்களின் மூலம் வருவாய் கிடைத்தால் மட்டுமே வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்கும். உரம், இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேசெல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கவலை அடைந்துள்ளனர். நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை. தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை.

    எனவே அரசு முன்வந்து விவசாயிகளை பாதிக்காதவகையில் உரிய விலையை நிர்ணயித்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×