search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தானியம், தீவனம் அளிக்கும் சோளம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    தானியம், தீவனம் அளிக்கும் சோளம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

    • நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது
    • துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரம் கொங்கல்நகரம் கிராமத்தில் விவசாயி சுந்தரராஜன், கோட்டமங்கலம் விவசாயி ராமசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ 32 ஆதார நிலை விதைப்பண்ணைகளை, திருப்பூர் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அதன் பின் அவர் கூறியதாவது:-

    உணவே மருந்து என்ற அடிப்படையில், நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது.துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது. தற்போது உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் மீதான ஆர்வம் எளிதாக கிடைத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.

    இதில்சோளம் பிரதான சிறுதானிய சாகுபடி பயிராக உள்ளது. பிற சிறுதானியங்களை ஒப்பிடும்போது, அதிகளவு புரதசத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் செரிமானத்திற்கு உகந்தது.குடிமங்கலம் வட்டாரத்தில் சோளப்பயிர் சராசரியாக 400 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோ 32 ரகம் 105 முதல் 110 நாட்களில், 220 முதல் 300 செ.மீ., வரை வளரும்.மானாவாரி, இறவை என இரண்டு பருவத்திற்கும் ஏற்றது. தீவனம், தானியம் என இரண்டிற்கும் ஏற்ற ரகமாகும். இலைகள் நன்கு வளைந்து கதிர்கள் சமச்சீராகவும், தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

    இதன் ஆயிரம் தானிய எடை 16.25 கிராமாக இருப்பதால் ெஹக்டேருக்கு சராசரியாக 2,445 கிலோ, தானிய மகசூலும், 6,490 கிலோ தீவனமும் தரும் ரகமாகும். தானியம் அதிக புரதசத்தும் (11.31 சதவீதம் முதல் 14.66 சதவீதம்) நார்ச்சத்தும் (4.95 முதல் 5.8 சதவீதம்) கொண்டது. எனவே இந்த சோள ரகத்தினை விவசாயிகள் பயிரிட்டு தானியம், தீவனம் என இரண்டிலும் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்கலாம். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    மேலும் சிறுதானிய சோளம் சாகுபடிக்கு விதை பண்ணைகளை உரிய நேரத்தில் வயல் ஆய்வுகள் மேற்கொண்டு கலவன்கள் அகற்றி உரிய தொழில் நுட்ப தகவல்கள் வழங்கி தரமான விதைகளாக உற்பத்தி செய்ய வேண்டும் என விதை சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா பானு, உதவி விதை அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×