

திருப்பூர் :
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டில் 360 பள்ளி வாகனங்களும், அவிநாசி வட்டாரத்தில் 230 வாகனங்கள் என மொத்தம் 590 பள்ளி பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை வாகனங்களின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் பள்ளி திறக்க உள்ள நிலையில் பள்ளி பஸ்களின் ஆய்வை மே இறுதிக்குள் முடிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து இன்று திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் திருப்பூர் வடக்கு , அவிநாசி வட்டாரத்துக்குட்பட்ட 590 பள்ளி, கல்லூரி பஸ்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பஸ்களின் கண்டிஷன், பள்ளி பஸ்களில் படிக்கட்டுகளின் உயரம், பின்புறம், இடதுபுறம், மற்றும் வலது புறம் உள்ள அவசர கால வழி, விபத்து ஏற்படும் வானங்களில் முதலுதவி வசதி, மாணவ மாணவியர் இருக்கை, வேக கட்டுப்பாட்டு கருவி, தகுதி சான்று கால அவகாசம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி பஸ்களுக்கான ஆய்வு வரும் 19 ந்தேதி பல்லடத்தில் நடக்கிறது.