இளநீர் தட்டுப்பாடு - வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி பற்றாக்குறை

நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இதில் இளநீர் சாகுபடிக்கான வீரிய ஒட்டுரக தென்னை மரங்கள் மட்டும் 3.5 லட்சம் உள்ளன.சாவக்காடு சிகப்பு, பச்சை, மலேசியன் சிகப்பு, மஞ்சள், நெட்டை ஒட்டு ரக இளநீர் சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாகுபடியாகும் இளநீர், திருப்பூர், சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்பட தமிழகம் முழுவதிலும் அனுப்பப்படுகிறது.அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

கத்திரி வெயில் முடிந்தும், நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலும் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது மும்பை, ஆந்திரா, குஜராத், புதுடெல்லி பகுதிகளில் இப்பகுதி இளநீருக்கு அதிக கிராக்கி உள்ளது.ஆனால் இளநீர் வரத்து குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தேவைக்கே போதுமானதாக உள்ளது.

வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடு முழுவதிலும், தினமும் 3 முதல் 5 லட்சம் இளநீர் அனுப்பப்பட்டு வந்தன. தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.இதன் வாயிலாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் தினமும் 57 லட்சம் ரூபாய் வரையில் வர்த்தகம் நடக்கிறது. தற்போது வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால், பண்ணையில் ஒரு இளநீர் 31 முதல் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் துவங்கும் வரையில் விலை குறையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com