

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு வடம், பார்க்கின்சன் மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை அறை எண் 23, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் 27.12.2022 ந்தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.