

திருப்பூர்:
திருப்பூர் - பெருந்தொழுவு ரோட்டில் உள்ள அமராவதிபாளையத்தில் திங்கள்தோறும் கால்நடைச்சந்தை நடக்கிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க வந்து செல்கின்றனர்.
சராசரியாக 500 முதல், 1,200 மாடுகள் வருகின்றன. ரூ. 1.5 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. ஆட்டோ, வேன், லாரி என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்த, மாடுகளை கட்ட போதிய வசதி இருந்தும் கால்நடைகளுக்கான தண்ணீர் வசதி மட்டும் இல்லை.
காலை 10 மணி முதல், மாலை 3 மணி வரை சந்தை நடப்பதால் வாயில்லா ஜீவன்கள் வெயிலில் வதங்கி சோர்ந்து போயின. எனவே தண்ணீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.
மேலும் புதிதாக பொறுப்பேற்ற மேயர் தினேஷ்குமாரிடம் வியாபாரிகளும், விவசாயிகளும் வலியுறுத்தினர். இதையடுத்து, கால்நடைச் சந்தையில் தொட்டி அமைத்து, மாடுகளுக்கு தேவையான தண்ணீரை சந்தை நடக்கும் நாட்களில் ஊற்றி வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
திங்கள்கிழமையன்று கூடிய சந்தைக்கு வந்த விவசாயிகள் அதனை கண்டவுடன், மகிழ்ச்சி அடைந்தனர். மாடுகள், எருதுகள் வெயிலில் வயிறார தண்ணீர் குடித்தன. விற்பனையான மாடுகள் தண்ணீர் அருந்திய பின் வியாபாரிகள் அழைத்துச் சென்றனர்.