

உடுமலை:
உடுமலை பஸ் நிலையம் எதிரே அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. கடந்த 1946 டிசம்பர் 18-ந்தேதி சென்னை மாகாணமாக இருக்கும் போது 'ஸ்ரீ ராமசாமி நாயுடு நினைவு' கால்நடை மருத்துவமனையாக அப்போதைய அமைச்சர் குமாரசாமி ராஜாவால் திறந்து வைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட மருத்துவமனையிலுள்ள பழமையான கட்டிடம் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
உடுமலை,குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில்பால் உற்பத்திக்காக பசு மற்றும் எருமை மாடுகளும், ஆடு வளர்ப்புத்தொழிலும், கறிக்கோழி உற்பத்தி மற்றும் முட்டை கோழி வளர்ப்பும் பிரதானமாக உள்ளது.
உடுமலை பகுதிகளில் ஆடு, மாடு என ஏறத்தாழ, 1.50 லட்சம் கால்நடைகளும், 1,500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளும் உள்ளன. அதோடு நாய், முயல் என ஏராளமான வளர்ப்பு பிராணிகளும் உடுமலை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றன.
சுற்றுப்பகுதி கிராமங்களில்கால்நடைத்துறை சார்பில், 20 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. 24 மணி நேரமும் கால்நடைகளுக்கு நவீன சிகிச்சை வசதிகள் கிடைக்கும் வகையில் உடுமலை கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும், பன்முக மருத்துவமனையாக கடந்த 3 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ்கூடுதல் டாக்டர்கள், கால்நடைகள் சிகிச்சைக்கு தேவையான, 'டிஜிட்டல் எக்ஸ்ரே,' 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்', அறுவை சிகிச்சைக்கூடம், நோய் அறிதல் ஆய்வுக்கூடம், வெளி மற்றும் உள்நோயாளி சிகிச்சைக்கூடம், ரத்த மற்றும் உயிர் வேதியியல் பரிசோதனை கூடம் என பல்வேறு நவீன கட்டமைப்புகள் வசதிகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுஅதற்காக 2.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் துவங்கிய ஒரு சில நாட்கள் பெயருக்கு இயங்கிய மருத்துவமனை, பன்முக மருத்துவமனைக்கான டாக்டர்கள் மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமல் இத்திட்டம் முடங்கியுள்ளது.
எனவே உடுமலை கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் பன்முக மருத்துவமனை அறிவிப்பையும் முழுமையாக செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.