search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவில்புதிய தேர் வெள்ளோட்டம் - வருகிற 23-ந்தேதி நடக்கிறது
    X
    வெள்ளோட்டம் நடைபெறவுள்ள மாரியம்மன் கோவில் புதிய  தேரை படத்தில் காணலாம். 

    உடுமலை மாரியம்மன் கோவில்புதிய தேர் வெள்ளோட்டம் - வருகிற 23-ந்தேதி நடக்கிறது

    • விஷ்ணு,முருகன்,விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும்,120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
    • காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில் தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும்,உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன்,விஷ்ணு,முருகன்,விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும்,120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

    பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14 ந் தேதி நடைபெற்றது.இந்தநிலையில் வருகிற 23 ந் தேதி (வியாழக்கிழமை) புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.அன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை,அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது.

    நண்பகல் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம், ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை நடைபெறும்.மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனர்.மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற மார்ச் மாதம் 28 ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது. உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 13 ந் தேதி நடைபெறவுள்ளது.

    Next Story
    ×