search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி - இன்று காலை நடந்தது
    X

    கோப்புபடம். 

    உடுமலை மாரியம்மன் கோவிலில் புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி - இன்று காலை நடந்தது

    • பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
    • திருப்பூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். 15- வது நாளில், திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    வருகிற 2023ம் ஆண்டு தேர்த்திருவிழா மார்ச் 28-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது. கம்பம் போடுதல் நிகழ்ச்சி ஏப்ரல் 4-ந்தேதியும், 7-ந்தேதி, பூவோடு, 12ந் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 13-ந் தேதி நடக்கிறது. பல நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் தேர் மரத்தினால் செய்யப்பட்டு, பின்னர் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டிருந்தது. தேர் பழமையானதாக உள்ளதால் அதற்குப்பதிலாக புதியதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் எண் கோண வடிவில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. பழைய தேரை விட சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும், ஐந்து நிலைகளை கொண்டதாகவும் தேரின் மொத்த உயரம், 12 அடியாகவும், இதில் தேர்பலகை 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம் இரண்டடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய தேருக்கு ஏறத்தாழ 780 கனஅடி இலுப்ப மரமும், 20 கனஅடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டது. தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என 220 மரச்சிற்பங்களும் வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில் 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. புதிய தேரை மாரியம்மன் கோவில் வடக்கு வாசல் அருகிலுள்ள தேர் நிலைக்கு கொண்டு வரவும், புதிய தேர் வெள்ளோட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. இதற்காக புதிய தேரை தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை, 5 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. காலை 6மணிக்கு, தேரை நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புதிய தேர் வெள்ளோட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோவில் தக்கார் ஸ்ரீதர் மற்றும் செயல் அலுவலர் தீபா தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×