

உடுமலை:
உடுமலை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை முழுமை அடையும் வரை நோயாளிகள் தங்குவதால், அவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அங்கு வந்து செல்கின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மருத்துவமனையில் மின் கசிவு மற்றும் திடீர் தீ விபத்துகளை கட்டுப்படுத்துவதற்குஆங்காங்கே, மோனோ அமோனியம் பாஸ்பேட் நிறைந்த சிலிண்டர்கள், மணல் தொட்டிகள் போன்றவை உள்ளன.
இருப்பினும் மின் கசிவு மற்றும் தீ விபத்து போன்ற நெருக்கடியான தருணங்களில் அவற்றை கொண்டு தீயை அணைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்கசிவால் ஏற்பட்ட தீ, ஊழியர்களின் சமயோசித புத்தியால், பரவாமல் தடுக்கப்பட்டது.
எனவே, தீத்தடுப்பு உபகரணங்கள் மட்டுமின்றி மருத்துவமனையில் 'பயர் பைட்டிங்' சாதனம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
'பயர் பைட்டிங்' எனப்படும் இந்த தானியங்கி தண்ணீர் தெளிக்கும் முறையில், மருத்துவமனை வார்டு அறைகளில், வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால், தானாகவே குழாய் இணைப்பு வாயிலாக, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ஆற்றல் உள்ளது. இந்த முறையில், தீ விபத்தை துவக்கத்திலேயே தடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், அரசு மருத்துவமனையில் இவ்வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.