

உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்கு பின் கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தக்காளி, வழக்கத்தை விட கூடுதலாக சாகுபடியாகியுள்ளது.
எனவே கடந்த சில நாட்களாக உடுமலை சந்தைக்குசுற்றுப்பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. பிற பகுதிகளிலும் தேவை குறைந்து வரத்து கூடுதலாகியுள்ளதால் தக்காளி விலை குறைந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி 14 கிலோ கொண்ட பெட்டிக்கு, 40 ரூபாய் முதல் 70 ரூபாய் அளவுக்கே விலை கிடைத்தது. சீசன் துவக்கத்திலேயே விலை சரியத்துவங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நீண்ட இடைவெளிக்கு பின் பருவமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
எனவே சிறு, குறு விவசாயிகள் கிணற்று பாசனத்துக்கு தக்காளி சாகுபடியையே தேர்வு செய்கின்றனர். தற்போது அறுவடை சீசன் துவக்கத்திலேயே விலை குறைந்துள்ளது.
தக்காளியை மதிப்பு கூட்டுவதற்கான சிறப்பு திட்டங்கள் மட்டுமே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.