பயிர்களின் மகசூல் அதிகரிக்க மானிய விலையில் நுண்ணூட்ட உரங்கள் - விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டுகோள்

இச்சத்து குறைபாடு காரணமாக மகசூல் பல மடங்கு குறைவதுடன் விளைபொருட்களின் தரமும் குறைந்து காணப்படும்.மானிய விலையில் விவசாயிகள் இச்சத்து கலவையினை பயன்படுத்தி சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் மகசூல் பெறலாம்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நெல் 10 ஆயிரத்து 557 ஹெக்டேர், தானியம் 56 ஆயிரத்து 932 ஹெக்டேர், பயிறு வகைகள் 18 ஆயிரத்து 792 ஹெக்டேர், எண்ணை வித்துக்கள் 8 ஆயிரத்து 252 ஹெக்டேர், பருத்தி ஆயிரத்து 135 ஹெக்டேர், கரும்பு 2 ஆயிரத்து 960 ஹெக்டேர் என சராசரியாக 98 ஆயிரத்து 628 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயிர்கள் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கும் நுண்ணூட்டங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகள் கரிசல் மண் பூமியாகவும், ஓடைக்கல் பூமியாகவும் இருப்பதனால் சுண்ணாம்புச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதனால் பயிர்களுக்கு அளிக்கப்படும் உரங்கள் முழுமையாக கிடைக்காமல் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடனும், ஊதா நிற இலைகளுடனும், வளர்ச்சி குன்றி குறைபாட்டுடன் காணப்படுகின்றன. இச்சத்து குறைபாடு காரணமாக மகசூல் பல மடங்கு குறைவதுடன் விளைபொருட்களின் தரமும் குறைந்து காணப்படும்.

நுண்ணூட்டங்கள் பயிருக்கு குறைந்தளவே தேவைப்பட்டாலும், பயிரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நுண்ணூட்டக்கலவை என்பது கால்சியம், மாங்னீசியம், போரான், துத்தநாகம், இரும்பு, மாலிப்டீனியம் போன்ற நுண்ணூட்டங்களை உள்ளடக்கிய கலவை ஆகும்.விதைப்பு செய்தவுடன் பயிறுக்கு தேவையான அளவு உரிய இக்கலவையினை இடும் பொழுது, நுண்ணூட்ட சத்து குறைபாடுகள் நீங்கி பயிரின் மகசூல் பலமடங்கு அதிகரிப்பதுடன் விளைபொருட்களின் தரமும் அதிகரிக்கிறது.

இந்நுண்ணூட்டங்கள் பயிரின் வகைக்கு ஏற்ப பயிறு நுண்ணூட்ட கலவை, சிறுதானிய நுண்ணூட்டம் வகைப்படுத்தப்படுகின்றன. பயிறு வகை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன், நிலக்கடலை மற்றும் தானியப்பயிர்களுக்கு, அதற்குரிய நுண்ணூட்டச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதம் 50 கிலோ மணலுடன் கலந்து, மேலாக தூவ வேண்டும்.

நுண்ணூட்ட கலவையை இடும்போது மணலுடனோ அல்லது குப்பையுடனோ கலந்து சீராக இடவேண்டும். இத்தகைய கூடுதல் மகசூல் தரும் நுண்ணூட்டங்கள், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்கள், பயிறுவகை மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் அல்லது ஹெக்டேருக்கு, ரூ.500 மானியத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. மானிய விலையில் விவசாயிகள் இச்சத்து கலவையினை பயன்படுத்தி சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடித்து, கூடுதல் மகசூல் பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com