கோடை கால தேவையை சமாளிக்க தொகுப்பு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர்

உடுமலை நகரம் மற்றும் ஒன்றிய கிராமங்களுக்கு இந்தாண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை:

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து  பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 

இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட 94 ஆயிரத்து 521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

இந்த மண்டல பாசன காலத்தில்சுற்றுக்கு 1,900 மில்லியன் கன அடி வீதம் 5 சுற்றுக்களில் 9,500 மில்லியன் கன அடி நீர்  உரிய இடைவெளி விட்டு வழங்க அரசாணை பெறப்பட்டது. அதன்படி தற்போது இறுதிச்சுற்றுக்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு முழுமையாக தண்ணீர் வழங்கவும், கோடை கால குடிநீர் தேவைக்கும் தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் பெற்று திருமூர்த்தி அணையில் இருப்பு செய்து வருகின்றனர். 

அவ்வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு வினாடிக்கு, 1,014 கன அடி நீர்வரத்து உள்ளது. 

நீர்மட்டம் 60 அடிக்கு 39.71 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு, 1,056 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதலாம் மண்டல பாசனத்தில் இறுதிச்சுற்றுக்கு தண்ணீர் வழங்கப்பட்ட பிறகு, அணையை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்காக, நீர் இருப்பு செய்யப்பட்டு வருகிறது. 

இதனால் உடுமலை நகரம் மற்றும் ஒன்றிய கிராமங்களுக்கு இந்தாண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com