இயற்கை ஆடை உற்பத்தியில் திருப்பூர் பின்னலாடை துறை

பின்னலாடை உற்பத்தியாளர்களை ஈர்க்கும்வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இயற்கை சாயமேற்றிய ஆடை தயாரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உலகளாவிய நாட்டினர் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் இயற்கை சார்ந்து தயாரிக்கப்படும் ஆயத்த ஆடை ரகங்களுக்கு சர்வதேச சந்தையில் நாளுக்குநாள் மதிப்பு அதிகரித்துவருகிறது.திருப்பூர் முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் செயல்படும் அடல் இன்குபேஷன் மையம் ஆயத்த ஆடைகளுக்கு இயற்கை சாயமேற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கிவருகிறது. வாழை நார், பட்டு இழையில் பின்னலாடை ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காய், கனி, இலை, மர பட்டைகளை பயன்படுத்தி இயற்கை சாய பொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

துணிகளுக்கு வெற்றிகரமாக இயற்கை சாயமேற்றும் தொழில்நுட்பங்களையும் கண்டறிந்து, இந்த மையம் செயல்வடிவம் கொடுத்துவருகிறது. இயற்கை சாயமேற்றிய ஆடை தயாரிப்பை நோக்கி பின்னலாடை உற்பத்தியாளர்களை ஈர்க்கும்வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:-

சர்வதேச அளவில் 72 சதவீத ஆயத்த ஆடைகள், பயன்பாட்டுக்குப்பின் நிலத்தில் புதைக்கப்படுகிறது. ரசாயன நிறமிகள் உள்ள ஆடைகளால் இயற்கை வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான ஆயத்த ஆடைகள் நிலத்தில் புதைக்க உகந்தவையாக இல்லை.சர்வதேச ஆடை வர்த்தகர்கள், இயற்கை இழையில் இயற்கை சாயமேற்றி தயாரிக்கப்படும் ஆடை ரகங்களை வாங்கவும், விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளனர். எனவே இயற்கை சார் ஆடை தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது.அடல் இன்குபேஷன் மையத்தில், இயற்கை இழை ஆடை ரகங்கள்,இயற்கை சாய பொடி தயாரிக்கப்பட்டுள்ளது. துணிக்கு இயற்கை சாயமேற்றி சோதனை செய்யப்பட்டுள்ளது. புதுப்புது வண்ணங்களில் இயற்கை சாயம் தயாரிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்து, பின்னலாடை துறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.இதனால்புதுமையை விரும்பும் தொழில்முனைவோர் இயற்கை சார் ஆடை உற்பத்தியை நோக்கி ஈர்க்கப்படுவர். அவர்களுக்கு, இயற்கை சாயமேற்றிய ஆடை தயாரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பிரத்யேக பாடத்திட்டம் உருவாக்கி இயற்கை சார் ஆடை தயாரிப்பு பயிற்சிகள் அளிப்பது குறித்தும் திட்டமிட்டுவருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com