

உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன் ,விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை கிருத்திகை பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆவணி அமாவாசையையொட்டி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வாகனங்கள் மற்றும் பஸ்சில் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். பின்னர் மலையின் மீது உள்ள பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி சென்று குளித்து அடிவாரப் பகுதியில் மும்மூர்த்திகள், சுப்பிரமணியர், சப்த கன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அமணலிங்கேஸ்வரை வழிபட்டு சென்றனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.