கொடுவாயில் திடீரென பால்பண்ணை மூடல்: விவசாயிகள் முற்றுகை-பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது.திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் ஒன்று திரண்டு பால்பண்ணையை முற்றுகையிட்டபோது எடுத்த படம்.
விவசாயிகள் ஒன்று திரண்டு பால்பண்ணையை முற்றுகையிட்டபோது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை திருச்சி துறையூரை சேர்ந்த செல்வகுமார், சுந்தரமூர்த்தி மற்றும் கொடுவாய் செங்காட்டு பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் பால் வழங்கி வந்தனர். மேலும் இந்த நிறுவனம் மாத கணக்கில் பால் கொள்முதலுக்கான பணத்தை வழங்காமல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிறுவனத்தின் முதலாளிகள் திடீரென தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பால் கொள்முதல் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் துணை வட்டாட்சியர், பல்லடம் காவல் ஆய்வாளர், அவினாசிபாளையம் போலீசார், தெற்கு அவினாசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் பால் பணம் பாக்கி கொடுக்காமல் வைத்துவிட்டு, பால் பண்ணை மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com