

உடுமலை:
2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்தது. அதனை மேம்படுத்த உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறந்து போன பாடப்பகுதிகள் மற்றும் கதைகள் போன்றவற்றை மீண்டும் நினைவு கூறும் ஆசிரியர்கள், மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம் மாணவர்களின் கற்றல் மதிப்பீட்டை அறிய, நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் தயாரித்து அலகுத்தேர்வும் நடத்துகின்றனர்.
அதன் வாயிலாக படிப்பில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டு கூடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதேபோல் அரசு பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து வகுப்பு மாணவர்களின் தேர்வுகளும் பாதிக்கப்படாத வகையில் பாட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 10 மற்றும் பிளஸ்- 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், பிற வகுப்பு மாணவர்களுக்கும் முழுஆண்டுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘10 மற்றும் பிளஸ்- 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
அதேநேரம் பிற வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் முழு ஆண்டு தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பாடங்களில் வினாக்கள் தயாரித்து தேர்வை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றனர்.