

பல்லடம்:
பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்கள் உள்ளிட்டவற்றில் வீசி சென்று விடுகின்றனர். இதே போல கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் வாய்க்கால் அருகில் நிறுத்தி அவற்றை சுத்தம் செய்கின்றனர்.
வாகனத்தில் கொண்டு செல்லும் போது இறக்கும் கோழிகளை வாய்க்காலில் வீசுகின்றனர். இதனால் வாய்க்காலில் இறந்த கோழிகள் மிதந்து வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தண்ணீர் மாசடைகிறது.
வாய்க்காலில் வரும் தண்ணீரை குடிக்கும் கால்நடைகள், கோழிகள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், பறவைகள்,வன உயிரினங்கள், நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று கோழி மற்றும் கழிவுகளை வாய்க்காலில் வீசுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதிகாரிகள் ஒவ்வொரு பண்ணையிலும் தினமும் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வின் போது தினசரி இறக்கும் கோழிகளை கணக்கிடுகின்றனர். ஆனால் அவற்றை முறையாக குழிதோண்டி புதைக்க அறிவுறுத்துவது இல்லை. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல் குறித்தும், ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.