search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ்., ஊா்வலத்துக்கு  அனுமதி அளிக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ்., ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

    • அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும்.
    • தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமியன்று ஆா்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் நிறுவன நாளும், இந்நாட்டின் வெற்றி திருநாளுமாக கொண்டாடப்படும் விதமாக விஜயதசமி நாளில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலம் கடந்த 98 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அரசியல் கட்சி ஊா்வலமாக இல்லாமல் கட்டுப்பாடு உள்ள அணிவகுப்பாக அந்த ஊா்வலம் நடைபெறும். தனிநபரை குறிப்பிட்ட வாழ்க, ஒழிக கோஷங்கள் எதுவும் எழுப்பப்படாது. சீருடை அணிந்த தன்னாா்வலா்களால் மக்களிடையே கட்டுப்பாடு, தேசபக்தி, ஒற்றுமை, ஒழுங்கு போன்ற நற்சிந்தனையை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.

    கேரளம், புதுச்சேரி உள்பட எல்லா மாநிலங்களிலும் எந்த நிபந்தனைகளும் இன்றி ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியும் அமைதியாக உற்சாகமாக நடைபெற்றது. எந்த மாநிலத்திலும் இல்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை தமிழகத்தில் இருக்கிறது என தமிழக அரசு கருதுவது திமுக., அரசின் ஆளுமை தன்மையில் உள்ள குறைபாடாகத்தான் தெரிகிறது.

    அதே சமயம் தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்தில் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊா்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தும் தமிழகஅரசு செயப்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். இது ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரானதாகும்.

    ஆகவே, தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அரசு காலதாமதமின்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×