

திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லும் முக்கியமான ரோடாக புது மார்க்கெட் வீதி உள்ளது. காமராஜ் ரோடு, காமாட்சியம்மன் கோவில் வீதி, ஜம்மனை வீதி ஆகியவற்றை இணைக்கும் நான்கு குறுக்கு தெருக்களும் இந்த சாலையில் உள்ளன. ஏராளமான நகை கடைகள், துணிக்கடை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியாக உள்ளது.
தினமும் காலை முதல் இரவு வரை பல்லாயிரம் பேர் இங்கு வருகின்றனர். சொந்த வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வீதியில் சென்று வருகின்றன. பழைய பஸ் நிலையத்தில் தற்போது கட்டுமானப் பணி நடைபெறுவதால், பஸ்கள் இந்த பாதையைப் பயன்படுத்துவதில்லை.
இருப்பினும் பிற வழக்கமான போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதே அளவில் உள்ளது. இந்த சாலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஸ்மார்ட் சாலை அமைக்கும் வகையில் திட்டமிட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கடந்த 4 மாதம் முன்பே மழை நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த மாதம் வடிகால் பணிகள் நிறைவடைந்து, வீதிகள் பயன்பாட்டுக்கு வந்தது. அதன் பின் கடந்த வாரம் ‘ஸ்மார்ட் ரோடு’ அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக முன்னர் பயன்பாட்டில் இருந்த தார் ரோடு முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.
குண்டும் குழியுமாக சாலை மாறியதால் நடந்து செல்லக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை போடும் பணிக்காக நிலத்தை சமன்படுத்தும் வகையில் ரோலர் மூலம் பணி தொடங்கியது. இப்பணியை விரைந்து முடித்து சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.