

உடுமலை:
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படுகின்ற நீராதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் 4 மண்டலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், பூலாங்கிணர், கொமரலிங்கம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் காண்டூர் கால்வாயில் தொடர் நீர்வரத்து உள்ளதாலும் அணையின் நீர்இருப்பு 50 அடிக்கும் மேலாக நீடித்து வருகிறது.
அத்துடன் அணையின் கரை பகுதியில் தொடர் மழையின் காரணமாக செடிகள்,புற்கள் உள்ளிட்டவை வேகமாக வளர்ந்து வந்தது. அதைத் தொடர்ந்து அணையின் கரை பகுதியில் முளைத்துள்ள செடிகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.
இந்த சூழலில் பூங்கா அமைய உள்ள அணையின் அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பும் சீமைக்கருவேல மரங்கள் அற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. நன்மை தரும் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இந்த பணியை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். அணையின் முகப்பு பகுதியில் இருந்து உபரிநீர் வெளியேறும் சட்டர்கள் வரையிலும் இந்த பணி நடைபெறுகிறது.
இந்த பணியில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.