

திருப்பூர்:
ரேஷன் கடைகளில் தற்போது பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. கடைக்கு வரும் பொதுமக்களில் பலருக்கு கைரேகை பதிவாவதில்லை. குறிப்பாக முதியோருக்கு ரேகை பதிவாகாததால், அவர்கள் பொருள் பெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
கைரேகை பதிவாகா விட்டாலும் பொருட்கள் வாங்கலாம் என்று அதிகாரிகள் பொத்தாம் பொதுவாக கூறி விடுகின்றனர். ஆனால் பலரும் கைரேகை பதிவாகவில்லை என்று திரும்பி செல்லும் அவல நிலை உள்ளது. ஒவ்வொரு கடையிலும் நாளொன்றுக்கு 10 முதல் 20 பேர் வரை இதுபோல் பிரச்சினைக்கு உள்ளாகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ரேஷன் கடைக்கு வருபவர்களில் பலர் வயது முதிர்ந்தவர்கள். அவர்களால் ஆதார் மையத்திற்கு செல்வதில் சிரமம் உள்ளது.
யார் யாருக்கு கைரேகை பதிவாக வில்லையோ அவர்களை எல்லாம் சிறப்பு முகாமுக்கு வரவழைத்து மறுபடியும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.