

திருப்பூர்:
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் தையல் நிலைய உரிமையாளர் சங்கம்( பவர்டேபிள் சங்கம்) இடையே பவர்டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு சங்க பிரதிநிதிகளும் கடந்த டிசம்பர் 23-ந்தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அம்மாதம் 27ல் கூடிய பவர்டேபிள் சங்க செயற்குழு முதல் ஆண்டில் 30 சதவீதமும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதமும் என 4 ஆண்டுகளுக்கு மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு கேட்க முடிவு செய்தது.
இது குறித்து ‘சைமா’ சங்கத்துக்கு பவர்டேபிள் சங்கம் கடிதம் அனுப்பியது. பொங்கல் விடுமுறையை தொடர்ந்து பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து உற்பத்தி நிறுத்த போராட்டம் நடக்கிறது. இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் நாளை (20-ந் தேதி), மாலை, 4:30 மணிக்கு ஹார்வி ரோட்டில் உள்ள ‘சைமா’ அரங்கில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இழுபறி இன்றி பேசி, விரைவில் ஒப்பந்தம் மேற்கொண்டு கட்டண உயர்வு வழங்கவேண்டும் என பவர்டேபிள் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.