

திருப்பூர்:
பள்ளி கல்வி ஆணையரக இணை இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் போலியோ தடுப்பு மருத்துவ முகாம் வரும் பல்வேறு இடங்களில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. முதல்கட்டமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை வழிபாட்டின் போது இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர்களுக்கு அவசியம் விளக்க வேண்டும். நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் இப்பணிக்கான ஒத்துழைப்பினை உரிய முறையில் வழங்க வேண்டும். முகாம் சிறப்பாக செயல்பட உதவ வேண்டும்.
முகாம்களாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து, சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
உடுமலை தாலுகாவில், மையங்கள் அமைத்து, சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியில் கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்காக அவர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர் வாயிலாக சொட்டு மருந்து வழங்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பணியாளர்கள், சொட்டு மருந்து கொண்டு செல்லும் நேரம், 2 சொட்டு மருந்து கொடுத்த பின் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் மை வைத்தல், அதிக காய்ச்சல், குளிர் ஜுரம் இருப்பின் குழந்தை சொட்டு மருந்து போடுவதை தவிர்த்தல், விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து சொட்டு மருந்து அளித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.