

திருப்பூர்:
திருப்பூர் மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட 17 கழிவு வாகனங்கள் வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பொது ஏலம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாநகர காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 15 இரு சக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனங்களுக்கான பொது ஏலம் வரும் பிப்ரவரி 3-ந்தேதி நடைபெறுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
இந்த ஏலத்தில் பங்கேற்க இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரமும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
வருகிற 31-ந் தேதி, பிப்ரவரி 1-ந் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் ஏலத்தில் கலந்து கொள்ள ரசீது வழங்கப்படும். இரு சக்கர வாகனங்களுக்கு ஏலத் தொகையுடன் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியும் சேர்த்து உடனடியாகத் தொகையை செலுத்த வேண்டும்.
அதே வேளையில் ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீதே வாகனத்துக்கான ஆவணமாகும். எந்தப் பெயரில் ஏல ரசீது பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மோட்டார் வாகனப் பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2244305 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.