

திருப்பூர்:
கடந்த மாதம் 90 ரூபாய்க்கு விற்ற டீசல் தற்போது, 100 ரூபாயை கடந்துள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இது தொழில்துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங், வீவிங் என காடா துணி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.
உற்பத்தி சார்ந்த இந்நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர். சமீப காலமாக டீசல் விலை உயர்ந்து வருவதால் தொழில்துறையினர் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:
ஊரடங்கு, பஞ்சு, நூல் விலை உயர்வு, தொழிலாளருக்கான கூலி உயர்வு என ஜி.எஸ்.டி., என பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை கடந்து தொழில் செய்து வருகிறோம். தற்போது தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு மேலும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. ஜவுளி தொழில் துறையை பொருத்தவரை நூல்கள், துணிகளை எடுத்து வருவது சரக்கு டெலிவரி என போக்குவரத்து பிரதானமாக உள்ளது.
டீசல் விலை அதிகரிப்பதால் மூலதன பொருட்கள் உட்பட அனைத்தும் மேலும் விலை உயரும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை உயர்வால் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொழில் நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.