search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி., வாய்க்காலில் உயிரிழப்பை தடுக்க  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
    X

    கோப்புபடம். 

    பி.ஏ.பி., வாய்க்காலில் உயிரிழப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

    • கால்வாயின் பல இடங்களில் நீர் நிர்வாகத்திற்காக படிக்கட்டுகள் மற்றும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • படிக்கட்டுகளில் இருந்து தவறி கால்வாயின் தண்ணீரில் அடித்து செல்லப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு 4மண்டலத்திற்கு உட்பட்ட 3.77 லட்சம் ஏக்கருக்கு பிரதான கால்வாயில் தண்ணீர் வழங்கப்படுகிறது. திருமூர்த்தி அணையிலிருந்து 128 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதான கால்வாய் (பி.ஏ.பி.)அமைந்துள்ளது.

    விநாடிக்கு 1,031 கன அடி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கால்வாய் 7.55 அடி ஆழமுடையதாகும். பாசனத்துக்காக, கால்வாயில் முழு கொள்ளளவில், தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. அப்போது போதிய விழிப்புணர்வு இல்லாமல், கால்வாயில் குளிப்பது, கரையை ஒட்டி வாகனங்களை நிறுத்தி கழுவுதல் உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கால்வாயின் பல இடங்களில் நீர் நிர்வாகத்திற்காக படிக்கட்டுகள் மற்றும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இப்படிக்கட்டுகளை, துணி துவைப்பவர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் குளிக்கவும் பயன்படுத்துகின்றனர். அப்போது படிக்கட்டுகளில் இருந்து தவறி கால்வாயின் தண்ணீரில் அடித்து செல்லப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மேலும், தற்கொலை சம்பவங்களும் அதிக அளவு நடக்கிறது.

    கால்வாய் நீரோட்ட வேகம் மற்றும் ஆழம் குறித்த விழிப்புணர்வுக்காக பொதுப்பணித்துறை சார்பில், குறிப்பிட்ட இடங்களில் முன்பு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.பின்னர் விழிப்புணர்வு பணிகளில், தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதான கால்வாயின் தண்ணீர் வேகம் குறித்து தெரியாமல் குளிக்க செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    குறிப்பாக அணைப் பகுதியில் இருந்து வெள்ளகோவில் வரை கடந்தாண்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாய் செல்லும் பகுதியை சேர்ந்த கிராமத்தினருக்கு, தண்ணீர் வேகம், இழுவை குறித்த விழிப்புணர்வு உள்ளது. ஆனால் கோவை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பொள்ளாச்சி - தாராபுரம் மற்றும் இதர பிரதான வழித்தடங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் லாரி ஓட்டுனர்கள், பிரதான கால்வாயின் ஆழம் மற்றும் தண்ணீரின் வேகம் குறித்து தெரியாமல் குளித்து உயிரிழக்கின்றனர்.

    பெரும்பாலான இடங்களில் கால்வாய் கரை திறந்தவெளி பார் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கவும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நடப்பாண்டில் பிரதான கால்வாயில் மேலும் உயிரிழப்புகள் நிகழாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் முக்கியமான இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்து, குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி கழுவ அனுமதிக்கக் கூடாது.

    மேலும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொதுப்பணித்துறை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அபாயமான பகுதிகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எச்சரிக்கை பலகை வைத்து, கண்காணிப்புக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதனால், உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.பி.ஏ.பி . இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாசன காலம் இன்னும் சில மாதங்கள் நீடிக்க உள்ளதால், உடனடி நடவடிக்கை தேவையாக உள்ளது.

    பி.ஏ.பி பிரதான கால்வாய் மட்டுமல்லாது பல்வேறு கிளை கால்வாய்களிலும், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. வேகமாகச்செல்லும் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் குளிப்பவர்கள் விபரீதம் தெரியாமல் நீச்சல் பழக முயற்சிப்பவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எனவே கிளைக் கால்வாய்கள் அமைந்துள்ள பகுதியிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.

    மற்ற பாசன வாய்க்கால்கள் சம மட்டமாக உள்ள நிலையில், பிஏபி. வாய்க்காலில் தண்ணீர் செல்வது ஒவ்வொரு சில குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு பிறகு தாழ்வாக செல்லும் வகையில் சரிவாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கால்வாயில் நீரின் வேகம் குறித்து அறியாமலும், விடுமுறை தினங்களில் கூட்டம் கூட்டமாக வந்து குளிப்பதும் நடக்கிறது.இதில் கவனம் தவறும் போது பலர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழக்கின்றனர். எனவே பொதுப் பணித்துறை இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×