

உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். இதன் காரணமாக, கால்நடைத்துறையால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்வாயிலாக, கறவை மாடுகளில் செயற்கை முறை கருவூட்டல், சினைபிடிக்கும் திறனை அதிகரித்தல், மலட்டுத்தன்மையைக்கண்டறிந்து போக்குதல் என கால்நடை வளர்ப்போர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கறவை மாடுகளின் இனப்பெருக்கத்திறனை மேம்படுத்தவும் பால் உற்பத்தியைப்பெருக்கவும் உரிய வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:-
கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனத்தை சமச்சீர் அளவில் வழங்க வேண்டும். அதன் வாயிலாக பண்ணையை லாபகரமாக நடத்த முடியும்.
பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு கொடுப்பதன் வாயிலாக இனவிருத்தி மேலாண்மை பெருகும். அடர்தீவன அளவை சமச்சீராக கொடுப்பதால், மாடுகள், முழு உற்பத்தி திறனை பெறும்.கறவை மாடுகள், ஆரோக்கியமாக இருப்பதுடன், பால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இதுகுறித்து கிராமங்கள் தோறும் கால்நடை வளர்ப்போரிடம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.