

பல்லடம்:
திருப்பூர் எம்.ஜி.புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மகன் யுவன்ஸ்ரீ (வயது 20), இவர் கோவை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து நண்பருடன் பல்லடம் வந்த அவர் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வேன் அதிவேகமாக வந்து யுவன் ஸ்ரீ மீது மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவருக்கு கால் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சரக்கு வேன் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி மாணவர் மீது சரக்கு வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.