search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தக்காடையூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    நத்தக்காடையூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
    • குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளத்தில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தாழ்வான தரைப்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து பாதுகாப்பிற்கு தடுப்புச்சுவர் எதுவும் கட்டப்படவில்லை.

    இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள கான்கிரீட் தரைப்பாலத்தை கடந்து காங்கயம், நத்தக்காடையூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

    மேலும் குட்டப்பாளையம், புது வெங்கரையாம்பாளையம், சத்திரக்காட்டுவலசு, கொல்லன்வலசு உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள், கிராம பொதுமக்கள் தங்களின் வாகன போக்குவரத்து வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த தாழ்வான தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கான்கிரீட் தள சாலை மிகவும் பழுதடைந்து கான்கிரீட் பெயர்ந்து, குண்டும், குழியுமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    மேலும் பலத்த மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிக அளவில் வேகமாக பாய்ந்து வரும் மழைநீர் இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தாழ்வான தரைப்பாலத்தை மூழ்கடித்துபடி, மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கனரக, இருசக்கர வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள தாழ்வான கான்கிரீட் தரைப்பாலத்தை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு, இருபுறமும் புதிய தடுப்பு சுவருடன் கூடிய மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×