

உடுமலை:
உடுமலை பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட பிரதான சாலைகள், கிராம இணைப்பு சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்கள் காணப்படுகின்றன.
ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறுவடை சீசன் துவங்கும். புளிய மரங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக புளி பறிப்பதற்கான ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு சீசன் துவங்கியுள்ள நிலையில், சாலையோர மரங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு பருவ மழை அதிகரித்ததால் காய் உருவாகும் சமயத்தில் பெய்த மழை காரணமாக எடை குறைவானதாகவும், மகசூல் குறைந்தும் காணப்படுகிறது. சீசன் காரணமாக வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. விதையுடன் கிலோ 50 ரூபாய்க்கு விற்று வருகிறது.
புளியம்பழங்களை தரம் பிரித்து விற்பனை செய்யும் போது கூடுதல் விலை கிடைக்கிறது. கிராமங்களில் இத்தகைய பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். பழத்திலுள்ள கொட்டை மற்றும் நார் ஆகியவற்றை பிரித்து தட்டி விற்பனைக்காக அனுப்புகின்றனர். இதனால் உடுமலை பகுதிகளில் இப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.