

பல்லடம்:
பல்லடத்தில் வடிகால் வசதி உள்ள நிலங்களில் புதினா சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலிங்கம் கூறியதாவது:-
நிலவளம் உள்ள பகுதிகளில் புதினா சாகுபடி செய்து விவசாயிகள் பயனடையலாம். நல்ல வடிகால் வசதியுடைய நிலங்களில் புதினா நன்கு வளரும். தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
நிலத்தை உழுது 10 டன் மக்கிய தொழுஉரம் இட்டு தண்டுக் குச்சிகளை, 40 க்கு 40 செ.மீ., இடைவெளியில் மழைக்காலத்தில் நடவு செய்ய வேண்டும். இதை பூச்சி நோய் தாக்குவதில்லை. களைகளை அகற்றி நன்கு பராமரித்தால் நடவு செய்த 5-வது மாதத்தில் முதல் அறுவடையும், அதன் பின் மூன்று மாத இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
நல்ல முறையில் பராமரித்தால் நான்காண்டுகள் மகசூல் எடுக்கலாம். 1 வருடத்திற்கு 1 எக்டரில் இருந்து 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும். இதற்கு ஆண்டு முழுவதும் தேவை இருப்பதால் விவசாயிகள் புதினா சாகுபடி செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.