

பல்லடம்:
பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் 47-வது குண்டம் திருவிழா கடந்த 27-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது. சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது.
இதில் இன்று காலை 7 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர். பின்னர் பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழி பட்டனர்.
குண்டம் திருவிழாவில், முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, கோவில் நிர்வாகிகள் பங்காரு சாமி நாயுடு, கிருஷ்ணசாமி,தேவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.