

திருப்பூர்:
கடந்த காலங்களில் நம் நாட்டுக்கு பெரும் போட்டியாக சீனா இருந்து வந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக சீனா இறக்குமதி குறைந்துள்ளது. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்ததால் மல்பெரி செடி வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் பட்டுக் கூடுகளின் உற்பத்தியும் கணிசமாக குறைந்தது.
தேவை அதிகரிப்பு, உற்பத்தி சரிவு, சீனா இறக்குமதிக்கு கட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் வரலாறு காணாத அளவு பட்டுக் கூடுகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ பட்டு கூடு 1,005 ரூபாய்க்கு விலைக்கு விற்கிறது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச விலை உயர்வு ஆகும்.
மல்பரி சாகுபடி விவசாயிகள் சிலர் கூறுகையில்:
கடந்த காலங்களில் சராசரியாக ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விலை போகும். அதற்கும் கீழ் சரிந்தால் நஷ்டம் ஏற்படும். நமக்கு பல நேரங்களில் சீன இறக்குமதியால் நஷ்டம் ஏற்பட்டது. இதுவரை கிலோ 650 ரூபாய்க்கு விலைபோனதே அதிகபட்ச விலையாக இருந்தது.
நடப்பு சீசனில் உச்சபட்ச விலைக்கு விற்பனையாகிறது. இதுவரை இதுபோன்ற விலை கிடைத்தது கிடையாது. இந்த ஆண்டுதான் பட்டு கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பொற்காலமாக அமைந்துள்ளது என்றனர்.