

உடுமலை:
கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை நடந்து வருகிறது. இந்த சீசனில் அபரிமிதமான விளைச்சல் காரணமாக விலை சரிந்துள்ளது. முதல் தர தக்காளி ஒரு டிப்பர் (14 கிலோ) 80 ரூபாய்க்கு விலை போகிறது.
காய்ப்புக்கு வந்த புதிதில் பழங்கள் திரட்சியாக இருந்தால் மட்டுமே இந்த விலை கிடைக்கிறது. பாதி அறுவடை முடிந்த செடிகளில் கிடைக்கும் தக்காளி அளவில் சிறுத்து விடுகிறது. அது ஒரு டிப்பர் 60 ரூபாய்க்கு விலை போகிறது.
பறிப்பு கூலி மற்றும் வேன் வாடகை ஆகியவை தக்காளி விற்கும் விலையை விட அதிகமாக உள்ளது. இதனால் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை மேய விடுகின்றனர். மேலும் சிலர் வேறு வழியின்றி உழவு ஓட்டி வேரோடு அழித்து வருகின்றனர்.