

உடுமலை:
உடுமலை மானுப்பட்டியில் மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு கட்டுப்பாட்டுக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த விளக்க பயிற்சி முகாம் வேளாண்துறை சார்பில் நடத்தப்பட்டது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் முருகானந்தம் வரவேற்றார்.
கோவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல்துறை முதன்மை இயக்குனர் பிரபாகரன், பேராசிரியர்கள் சாத்தையா, கிருஷ்ணமூர்த்தி, சண்முகம் ஆகியோர் படைப்புழு தாக்குதல் பரவும் முறை, ஒருங்கிணைந்த கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்தனர்.
தொடர்ந்து ‘கிராமத்தங்கல்’ திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் பயிற்சி பெற்று வரும் 10 மாணவிகளும் பங்கேற்றனர். மேலும் படைப்புழு ஒருங்கிணைந்த மேலாண்மையில் இனக்கவர்ச்சி பொறி, வேப்பம்புண்ணாக்கு, படைப்புழு முட்டைகளை கொல்லும் ஒட்டுண்ணி, விதை நேர்த்தி முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
மேலும் பச்சை பூஞ்சாணம் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் மானுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.