ஆலாங்காடு பகுதியில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றம்

அவகாசம் கேட்ட ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் வீடுகளைக் காலி செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதியிலும் உள்ள நீர் வழிப்பாதை, குளம், குட்டைகள் அவற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இது போன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை அகற்றும் முயற்சி மேற்கொண்டன.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலாங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு கடந்த மாதம் காலி செய்ய அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது.அங்குள்ள 217 வீடுகளில் வசிப்போருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் தகுதியுடைய பலருக்கு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது.

கடந்த சில நாட்கள் முன், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்ட போது எதிர்ப்பு தெரிவித்து சிலர் மறியல் செய்தனர். பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வீடுகள், தேர்வு முடியும் வரை அவகாசம் கேட்கப்பட்டது. அதிகாரிகள் அதற்கு சம்மதித்தனர்.

மற்ற வீடுகள் அனைத்தும் காலி செய்து இடித்து அகற்றப்பட்டது.தற்போது பொது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அவகாசம் கேட்ட ஆக்கிரமிப்பாளர்களும் தங்கள் வீடுகளைக் காலி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com