

உடுமலை:
ஊட்டி, ஒசூர், பெங்களூரு உட்பட குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும் பகுதிகளில் மட்டும், காலிபிளவர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சமவெளிப்பகுதியான உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப் பாசனத்துக்கு, காலிபிளவர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு, ‘மல்ஷிங் ஷீட்’, நுண்ணீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்கள் கைகொடுக்கிறது.
சாகுபடியில் 80வது நாளில் இருந்து பூக்களை அறுவடை செய்யலாம். தற்போது சின்னப்புதூர், ராஜாவூர் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த பரப்பளவில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
காலிபிளவர் சாகுபடிக்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் பின்பனிக்காலத்தில் அறுவடை செய்ய திட்டமிட்டு சாகுபடியை துவக்கினோம். ஆனால் கோடை வெப்பம் முன்னதாகவே ஆரம்பித்துள்ளதால் செடிகளில், நூல்புழு உட்பட தாக்குதல் அதிகரித்துள்ளது.
பிற பகுதிகளில் இருந்து வரத்து இல்லாததால் அறுவடை சீசனில், உள்ளூர் சந்தைகளிலேயே காலிபிளவருக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.