

திருப்பூர்:
முக்கிய சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்களில், தங்களது வியாபாரத்தை பெருக்க வசதியாக பொருள் வணிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் மற்றும் நெகிழியில் விளம்பர போர்டுகளை செய்து, சாலையோரம் உள்ள பச்சை மரங்களில் ஆணி அடித்து மாட்டி விட்டு செல்வதால், நாளடைவில் மரங்கள் பட்டுப்போயும், ஆணி அடிப்பதால் மரங்கள் பாதிக்கப்பட்டு பாதியாக உடைந்து விழும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் வழியாக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகள் பல்வேறு நகரங்களை இணைக்கின்றன.
மாவட்ட மற்றும் மாநில நெடுஞ்சாலை இருமருங்கிலும் ஏராளமான புங்கன், புளியமரம், அரசமரம், வேப்ப மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன.
இதில் பல மரங்கள் 50 ஆண்டுகளை கடந்தவையாக உள்ளன. மேலும் கோடை உச்சம் தொடும் நேரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் சிறிது நேரம் இளைப்பாற இம்மரங்கள் பேருதவியாக உள்ளன.
இந்த நிலையில் தற்போது மரங்களில் ஆணி அடித்து நெகிழி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன பள்ளி கல்லூரி விளம்பர பதாகைகள், ரியல் எஸ்டேட்,கோச்சிங் சென்டர் விளம்பர போர்டுகள் அதிக அளவில் பச்சை மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆணி அடிப்பதால் நாளடைவில் மரங்கள் காய்ந்து பட்டுப்போய் விடுகிறது. சிறிய மரங்கள் முதல் ஆண்டுகள் கடந்த மரங்கள் வரை ஆணி அடித்து விளம்பரம் வைப்பது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்:-
தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறும் நிலையில், தங்கள் நிறுவன விளம்பர பதாகைகளை, இதற்கென வேலைகளில் ஈடுபடும் நபர்களிடம் கொடுத்து விடுகின்றன.
அவர்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆன போர்டுகளை சாலையோரம் உள்ள பச்சை மரங்களில் ஆணி அடித்து மாட்டிவிட்டுச் செல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுக்கு முன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஒருவரின் உத்தரவை அடுத்து இது போன்று விளம்பரம் செய்யும் நபர்கள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, அனுமதி பெற்று கயிறுகளை கொண்டு விளம்பரங்கள் வைக்கப்பட்டன.
இதன் மூலம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானமும் கிடைத்தது.
அதன் பின்னர் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வது குறித்து உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்காததால், தற்போது மீண்டும் மரங்களில் ஆணி அடிப்பது அதிகரித்துள்ளது.
மரங்களை காக்க மக்கள் ஒன்று திரளாவிட்டால்,பசுமை குறைந்து மழை வளமும் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பவர்கள் மீது மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.