

பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில், ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலையில், அந்த வழியாக செல்லும் பி.ஏ.பி. பாசனத் திட்ட வாய்க்கால் பழுதடைந்து நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால் ஒவ்வொரு முறையும் பாசன வாய்க்காலில் தண்ணீர் வரும்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தநிலை நீடித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மங்கலம் ரோடு முதல் அம்மாபாளையம்,மாணிக்காபுரம்,வேலம்பாளையம், உள்ளிட்ட ஊர்களின் வழியாக பி.ஏ.பி., பாசன வாய்க்கால் செல்கிறது. இது 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து உள்ளது.
வாய்க்காலின் இரண்டு புறமும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சிதிலமடைந்து உள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் வரும் போதெல்லாம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடைகிறது.
இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை,. வாய்க்காலில் தண்ணீர் வரும் போதெல்லாம் பயிர்கள் சேதமடைவது வாடிக்கையாக உள்ளது.
எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பி.ஏ.பி. வாய்க்காலை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.