நிதி நிறுவன அதிபர் கொலை - கொலையாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிர வேட்டை

கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது.பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்:

திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ பவா்காா்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவா் ரியல் எஸ்டேட் மற்றும் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். திருமணமான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய், தந்தையருடன் தனியாக வசித்து வந்தாா்.

இந்தநிலையில் பாலசுப்பிரமணியனின் பெற்றோா் பழனி அருகே உள்ள கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளனா். பின்னா் புதன்கிழமை காலை இருவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், ரத்தக்கறை இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனர்.

மேலும் கத்திக்குத்து காயங்களுடன் பாலசுப்பிரமணியனின் உடல் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

பாலசுப்பிரமணியனை கொன்ற கொலையாளிகள் யாரென்று தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாரேனும் பாலசுப்பிரமணியனை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில்2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலசுப்பிரமணியன் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் யார் யார், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக யார் யாருடன் பழக்கம் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com